WELCOME

வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றியதகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

Saturday, January 7, 2012

தன்னை அறிந்ததுண்டால் தலைவனை நீ அறிவாய் மகனே ....


தன்னை அறிந்ததுண்டால் தலைவனை நீ அறிவாய் மகனே ....


           அன்பான அய்யா வழி அன்பர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.சிறிய இடைவெளிக்கு பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.அனைத்தும் அய்யா நிச்சயித்தபடி என்ற எண்ணத்தை மனதில் கொண்டு மீண்டும் தொடருகிறேன்.அய்யா உண்டு!

         வைகுண்டர் நமக்கு அருளிய அகிலத்திரட்டு ,அருள் நூலில் பல இடங்களில் இறைவனின் சர்வ வல்லமையை பற்றியும்,அந்த சர்வ வல்லமை பொருந்திய சக்தியாகிய இறைவனை மனிதன் எவ்வாறு அறிந்து கொண்டு அவனை அடைய வேண்டும் எனவும் கூறுகின்றார்.பல வரிகள் காணப்பட்டாலும் அருள் நூலில் சிவகாண்டத்தில் அய்யா கூறியுள்ள சில வரிகளைய் காண்போம்,

"என்னை அறியாமல் ஏதும் வகை உலகில் இல்லை
தன்னை அறிந்ததுண்டால் தலைவனை நீ அறிவாய் மகனே
கண்ணாலே மணக்கண்ணாலே காணுமப்பா வழியதுதான்
என்னை அறிந்தவருக்கு ஈசன்வழி சொல்லுகிறேன்"


         சர்வதையும் இயக்கும் சக்தியாகிய இறைவனே மிகப் பெரியவன்.அவனன்றி அனுவும் அசையாது,அவனே ஆக்கவும்,காக்கவும்,அழிக்கவும் செய்கின்றான்.இவ்வுலகில் நடைபெறும் அனைத்தும் அவனை சார்ந்தே நடக்கின்றது.அந்த அழியாத ,யாராலும் அழிக்க முடியாத சக்தியை அறியாத மனிதர்கள் ,இந்த பிறவி எனும் பெருங்கடலை நீந்தி கரை சேரமுடியாமல் தவிக்கின்றனர்.அந்த சக்தியை அறிந்தவர்கள் ஜோதிமயமான அதனுடன் ஐக்கியமடைந்து நிலையான வைகுண்ட பேறு பெறுகின்றன.

          அவ்வாறு இறைவனை அடைவது மிக எளிதான காரியம் என்றால் ,இந்த கலியுகம் தோன்றியிருக்க வாய்ப்பில்லை அனைவரும் இறைவனை அடைந்திருப்போம்.அது மிகவும் கடினமான ஒருவிசயம் என்றால் நாம் இறைவனையே மறந்திருப்போம்.ஆனால் இன்றும் இறைவனை நாம் வணங்கி வருகிறோம்,ஏனென்றால் நம்மில் பலர் இறைவனை கண்டு உணர்ந்துள்ளனர் என்பதால் தான்.அப்படியானால் இறைவனை எவ்வாறு அடைவது?


        "என்னை அறியாமல் ஏதும் வகை உலகில் இல்லை" என்ற வரிகள்,அழியாத சக்தியாகிய இறைவனை அறியாமல் இந்த உலகத்தில் எந்தவொரு காரியமும் நிறைவடையாது என்பதை உணர்த்துவதை  காணுங்கள்.அத்தகைய இறைவனை அறிய நாம் என்ன செய்ய வேண்டும்.பதில் அடுத்த வரியிலேயே அய்யா நமக்கு தருகிறார்.
      
  "தன்னை அறிந்ததுண்டால் தலைவனை நீ அறிவாய் மகனே".ஆம் முதலில் தான் யார், நாம் என்ன நிலையில் வாழ்கிறோம்,நமக்குள் மிகுந்திருப்பது நல்ல எண்ணங்களா?,கெட்ட எண்ணங்களா? என ஆராய்ந்து கெட்ட எண்ணங்களை அழிக்க முயல வேண்டும்.

            நம்முள் இருக்கும் இறைவனை நம் மனதில் மூலமாக தியானித்து அறிய முயல வேண்டும்.இதனையே அய்யா "கண்ணாலே மணக்கண்ணாலே காணுமப்பா வழியதுதான்" என உரைக்கின்றார்.நம் மனதில் இருக்கும் அகந்தை,அதிகாரம்,வஞ்சம்,பொறாமை,காமம் இன்னும் பல கலி எண்ணங்கள் அகல அகல நம் மனம் இறைவனை தன்னுள் தாங்கி நமக்கு காட்டுகிறது.தூய ஒளியானது நம்முள் நிறைகிறது.

அடுத்த வரியை பாருங்கள், "என்னை அறிந்தவருக்கு ஈசன்வழி சொல்லுகிறேன்".
        அவ்வாறு என்னை மனதில் உணர்ந்தவர்களுக்கு பரம்பொருளை அடைந்து பிறவி இல்லாத தர்மயுக வாழ்வை பெறும் வழியை நான் காட்டித் தருவேன்,என்கிறார்.இங்கு ஈசன் வழி என்பது கலியற்ற நிலையான தர்மயுக வாழ்வைக் காட்டுகிறது.எனவே கலி எண்ணங்களை அழித்து தருமயுக வாழ்வு பெறுவோம்.

தவறுகள் இருப்பின் அய்யா பொறுத்து அய்யா மாப்பு தரனும்!
அய்யா உண்டு!

No comments:

Post a Comment